
செய்திகள் மலேசியா
சமையல் எண்ணெய் உச்சவரம்பு விலையை நிர்ணயிக்க ஆய்வு: அமைச்சர் தகவல்
கோலாலம்பூர்:
சமையல் எண்ணெய்யின் உச்சவரம்பு விலையை நிர்ணயிக்கும் பொருட்டு அரசு அதிகாரிகள் ஓர் ஆய்வு மேற்கொண்டு வருவதாக உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் ரசூல் வாஹித் (Rosol Wahid) தெரிவித்துள்ளார்.
நடப்பு சந்தை விலையின் அடிப்படையில் இந்த உச்சவரம்பு விலை நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தோட்டத்துறை தொழில்கள் மற்றும் பொருள்களுக்கான அமைச்சு (plantation industries and commodities ministry), நிதி அமைச்சு ஆகியவற்றுடன் இது குறித்து விவாதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அதற்கான சந்திப்புக் கூட்டத்தின்போது சமையல் எண்ணெய் விலை உயர்வு பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து விவாதிக்கப்படும் என்றார்.
"கச்சா பாமாயில் விலை அதிகரிப்பு காரணமாகவே சமையல் எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. ஐந்து கிலோ சமையல் எண்ணெய் பேரங்காடிகளிலும் சில்லரைக் கடைகளிலும் 30 முதல் 35 ரிங்கிட் வரையிலான விலைக்கு விற்கப்படுகிறது.
"கொரோனா நெருக்கடி காலத்தில் இந்த விலை உயர்வு காரணமாக மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மனதிற்கொண்டு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்," என துணை அமைச்சர் ரசூல் வாஹித் உறுதி அளித்துள்ளார்.