
செய்திகள் மலேசியா
கொரோனா UPDATE: 101 வயது மூதாட்டி உட்பட 76 பேர் மரணம்
கோலாலம்பூர்:
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக 76 மரணச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அவர்களில் 101 வயது மூதாட்டியும் அடங்குவார்.
கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முழு முடக்க நிலை உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 914ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 459 பேருக்கு சுவாச உதவி அளிக்கப்பட்டுள்ளது.
இதே வேளையில் 76 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 101 வயதான, சிலாங்கூரைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து கிருமித்தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,844ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளில் இருந்து 8,334 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 572,113ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
இதே போல் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 652,204ஆக கூடியுள்ளது.