
செய்திகள் மலேசியா
ஹஜ் பயணத்துக்கு மலேசியப் பயணிகள் அனுப்பப்பட மாட்டார்கள்: அமைச்சர் ஸுல்கிஃப்ளி
புத்ராஜெயா:
இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்துக்கு மலேசியா சார்பில் யாத்ரீகர்கள் அனுப்பப்பட மாட்டார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
சவுதி அரசாங்கத்தின் அறிவிப்பை அடுத்து இம் முடிவு எடுக்கப்பட்டதாக மலேசிய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் துறையின் இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ ஸுல்கிப்லி முஹம்மது அல் பக்ரீ Datuk Seri Zulkifli Mohamad Al-Bakri இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், உலகளவிலான கொரோனா பெருந்தொற்றுப் பரவலின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இம் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.
இந்த ஆண்டு ஹஜ் பயணத்தில் சவுதி அரேபிய குடிமக்களும் அங்கு வசிப்பவர்கள் மட்டுமே பங்கேற்க இயலும் என அந் நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.
"இன்று சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான துணை அமைச்சர் Dr Abdelfattah Sulaiman Mashat என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது வெளிநாட்டு ஹஜ்ஜுப் பயணிகள் தொடர்பாக சவுதி அரசு எடுத்துள்ள முடிவு குறித்து தெரிவித்தார்.
"எனவே, சவுதி அரசின் இம் முடிவுக்கு மதிப்பளித்து ஹிஜ்ரி 1442 ஹஜ் பயணத்துக்கு மலேசியா, யாத்ரீகர்களை அனுப்பாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதே போல் சவுதி அரசின் வெளியுறவு அமைச்சர் மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுதீன் துன் ஹுசைனை தொடர்பு கொண்டு இந்த விவரத்தை தெரிவித்துள்ளார்.
"இது தொடர்பாக சவுதி அரசு அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது," என்று டத்தோஸ்ரீ ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.