
செய்திகள் மலேசியா
தடுப்பூசி போட முடிவு: அகதிகள் குறித்து ஐநா மன்ற முகமையிடம் விவரங்கள் கேட்கும் மலேசிய அரசு
புத்ராஜெயா:
நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள பல்வேறு நாடுகளின் அகதிகள் குறித்து உரிய விவரங்களை அளிக்குமாறு ஐநா மன்றத்தின் அகதிகள் முகமையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஜெய்னுதீன் Hamzah Zainudin தெரிவித்துள்ளார்.
அகதிகளின் எண்ணிக்கை தெரிய வரும் பட்சத்தில் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது நாட்டில் 178,175 அகதிகள் ஐநா மன்றத்தின் அகதிகளுக்கான அடையாள அட்டையை வைத்துள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், அந்த அகதிகள் நாட்டின் எந்தெந்த பகுதிகளில் உள்ளனர் என்பது குறித்த விவரங்கள் கைவசம் இல்லை என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
"கொரோனா கிருமிக்கு எதிரான போராட்டத்தில் நாடு மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைய வேண்டும் என்ற இலக்குடன் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. எனவே ஐநா மன்றம் அகதிகள் குறித்த பட்டியலை அளித்தால் தடுப்பூசி போடும் நடவடிக்கைக்கு உதவிகரமாக இருக்கும்.
"தற்போது ஐநா அகதிகள் அட்டை, சிறைக்கைதிகள் குடிநுழைவுத்துறையால் தடுத்து வைக்கப்பட்டவர்கள் என அரசாங்கம் மற்றும் மூன்றாம் தரப்பால் அளிக்கப்பட்டுள்ள பல்வேறு ஆவணங்களை வைத்திருக்கும் 2.5 மில்லியன் வெளிநாட்டவர்களை உள்துறை அமைச்சு அடையாளம் கண்டுள்ளது. அவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.
"இது தொடர்பாக தேசிய தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் அமைச்சருமான கைரி ஜமாலுதீனுடன் இணைந்து செயல்படுவோம்.
"மலேசியா மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை எட்டிப் பிடிக்க நாட்டில் உள்ள அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்பதை மலேசியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்," என்று அமைச்சர் ஹம்ஸா ஜெய்னுதீன் Hamzah Zainudin தெரிவித்தார்.