
செய்திகள் மலேசியா
கொரோனா கிருமித்தொற்றுள்ள 48 வெளிநாட்டுத் தொழிலாளரை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநருக்கு அபராதம்
சுங்கைப்பட்டாணி:
கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட 48 வெளிநாட்டுத் தொழிலாளரை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முதலாளி தரப்பில் லாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் மொத்தம் 135 தொழிலாளர்களை மாவட்ட சுகாதார அலுவலகத்துக்கு அழைத்து வருமாறு அவர் கேட்டுக் கொண்டதாகவும் போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந் நிலையில், 48 கொரோனா நோயாளிகளை இவ்வாறு அழைத்துச் சென்றதை அடுத்து அந்த லாரி ஓட்டுநருக்கு சம்மன் அளிக்கப்பட்டது.
கொரோனா நோயாளிகள் இவ்வாறு வெளிப்படையாக அழைத்துச் செல்லப்படுவது குறித்து தங்களுக்குக் கிடைத்த தகவலின் பேரில் போலிசார் துரித கதியில் செயல்பட்டதாகவும், நேற்று மாலை 5 மணி அளவில் அந்த லாரி அடையாளம் காணப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கோல மூடா மாவட்ட காவல்துறை தலைவர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து லாரி ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், லாரியில் இருந்தவர்களில் 48 பேர் கொரோனா நோயாளிகள் என்பதை உணர்த்தும் வகையில் மணிக்கட்டுப் பட்டை அணிந்திருந்தனர் என்றும் கூறினார்.
இவ்வாறு மணிக்கட்டுப்பட்டை அணிந்துள்ள பலர் ஒரு லாரியில் மொத்தமாக அழைத்துச் செல்வது தொடர்பான 19 நொடி வீடியோ பதிவு ஒன்று நேற்று சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.