
செய்திகள் மலேசியா
அக்டோபரில் கூடும் என்றார் பிரதமர்; இயன்ற விரைவில் கூட்டச் சொல்கிறார் மாமன்னர்
கோலாலம்பூர்:
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதீன் யாசின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மாமன்னர் இயன்ற விரைவில் நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்ட வேண்டும் அறிவுறுத்தி இருக்கிறார்.
அரசியல் பார்வையாளர்கள் இந்த அறிவுறுத்தலை முக்கியமானதாகக் கருதுகின்றனர்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனினும் பல்வேறு காரணங்களால் அது இன்னும் சாத்தியமாகவில்லை. இந்நிலையில் மலாய் ஆட்சியாளர்களுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் மாமன்னர்.
நாடாளுமன்றக் கூட்டம் தொடர்பாக, பிரதமர் மொகிதீன் யாசினின் அறிவிப்பு வெளியான குறுகிய காலகட்டத்துக்குள் மாமன்னர் தன் கருத்தை தெரிவித்திருப்பதால் அது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மாமன்னரின் இந்த அறிவுறுத்தலை எதிர்க்கட்சிகள் வரவேற்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஒரே வழி என்று மாமன்னர் கருதுவதாக அரண்மனைக் காப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், முன்களப் பணியாளர்களுக்கும் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்துள்ள பொதுமக்களுக்கும் மாமன்னர் நன்றி தெரிவித்துள்ளார்.