
செய்திகள் மலேசியா
தடுப்பூசிகள் கொள்முதல் நடவடிக்கைகளை அரசு செய்து முடித்துவிட்டது: பிரதமர் மொஹிதீன் யாசின்
கோலாலம்பூர்:
தடுப்பூசிகள் வாங்குவது, அதற்கான தொகையை செலுத்துவது ஆகிய நடவடிக்கைகளை மலேசிய அரசு செய்து முடித்துள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
மலேசியாவுக்கான தடுப்பூசிகளை வினியோகிக்கும் நிறுவனங்கள் அவற்றை வேகமாக வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
தேசிய தடுப்பூசித் திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சர்கள் அனைவரும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என தாம் உத்தரவிட்டிருப்பதாக பிரதமர் மொஹிதீன் யாசின் தெரிவித்தார்.
"தேசிய அளவில் இது குறித்து விவரித்துள்ளேன். தடுப்பூசி போடும் வீதத்தை நாள் ஒன்றுக்கு 400,000ஆக அதிகரிக்க வேண்டும்.
"தற்போது நாள் ஒன்றுக்கு 250,000 தடுப்பூசிகளை செலுத்தும் இலக்கை எட்டிப் பிடித்துள்ளோம்.
இந்த எண்ணிக்கையை மேம்படுத்த வேண்டியுள்ளது. எனினும் இது தடுப்பூசி வினியோகத்தைச் சார்ந்துள்ளது.
"தற்போது நாடு முழுவதும் தேவைப்படுவதை விட குறைவான தடுப்பூசிகளே உள்ளன.நாம் அவற்றை இன்னும் வாங்கவில்லை என்பதல்ல. நாம் வாங்கியுள்ளோம். அதற்கான தொகையையும் செலுத்தி உள்ளோம்.
"அந்த தடுப்பூசிகள் இன்னும் வந்து சேரவில்லை என்பதுதான் நிலைமை. ஏனெனில் உலகம் முழுவதும் அத்தடுப்பூசிகளுக்கான தேவை உள்ளது," என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பிரதமர் குறிப்பிட்டார்.
"பல்வேறு தடுப்பூசி மையங்கள் அன்றாடம் போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தயாராக உள்ளன. எனினும் போதுமான தடுப்பூசிகள் வந்து சேராததால் அது சாத்தியமாகவில்லை," என்றார் பிரதமர் மொஹிதீன் யாசின்.