
செய்திகள் மலேசியா
சமூக வலைத்தளம் மூலம் பொய் தகவல் பரப்பிய மருத்துவருக்கு 5,000 ரிங்கிட் அபராதம்
கோலாலம்பூர்:
சினோவேக் தடுப்பூசி குறித்து சமூக வலைத்தளங்களில் துல்லியமற்ற, தவறான தகவல்களைப் பதிவிட்டதற்காக மருத்துவர் ஒருவருக்கு 5 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
“UiDM Polimas” என்ற பெயரில் முகநூலில் இயங்கிய ஜம்னுல் அஸ்ஹர் முல்கன் Jamnul Azhar Mulkan என்ற அந்த மருத்துவர் காணொலி ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இதன் மூலம் பொதுமக்களை அச்சமூட்டும் வகையில் பொய் தகவல்களைப் பரப்பியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டதாக ஹரியான் மெட்ரோ ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
பாடாங் பெசாரில் உள்ள Beseri clinicஇல் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அன்று அந்தக் காணொலியை அவர் எடுத்துள்ளார்.
இதையடுத்து அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் சட்டப்பிரிவின் கீழ் ஜம்னுல் அஸ்ஹர் (Jamnul Azhar Mulkan) மீது குற்றம்சாட்டப்பட்டது.
தன் மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது அதனை ஏற்றுக்கொண்டார் Jamnul.
எகிப்தில் மருத்துவம் படித்துள்ள Jamnul, சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார் என்றும் அவருக்கு 15 முதல் 30 வயதுக்குட்பட்ட எட்டு குழந்தைகள் இருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்துக்குப் பின்னர் அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவதாக அவரது வழக்கறிஞர் குறிப்பிட்ட நிலையில், நீதிமன்ற நடவடிக்கைக்குப் பின் அவர் அபராதத் தொகையைச் செலுத்தினார்.