
செய்திகள் மலேசியா
நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாரிசான் ஆதரிக்காது: இஸ்மாயில் சப்ரி யாகூப் திட்டவட்டம்
கோலாலம்பூர்:
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் பாரிசான் நேசனலைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை ஆதரிக்க மாட்டார்கள் என்று மூத்த அமைச்சரான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.
அத்தகைய தீர்மானத்தை ஆதரிப்பதில்லை என அந்த எம்பிக்கள் வாக்குறுதி அளித்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தை விரைவில் கூட்ட வேண்டும் என மாமன்னர் தெரிவித்திருப்பதை அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்பதாக கூறியுள்ள அவர், நடப்பு நாடாளுமன்ற அமர்வானது கொரோனா நெருக்கடி காலத்தில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
"அரசியல் களத்தில் நிலவும் வெப்பத்தை அதிகரிக்கும் வண்ணம் செயல்படக் கூடாது என்ற மாமன்னரின் கருத்துக்கு ஏற்ப எந்தவித நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் அதை ஆதரிப்பதில்லை என ஒப்புக் கொண்டுள்ளோம்.
"பெரிக்கத்தான் நேசனல் அரசாங்கத்தின் தேசிய மீட்புத் திட்டத்தை அம்னோவும் இதர பாரிசான் நேசனல் உறுப்புக்கட்சி எம்பிக்களும் ஆதரிப்போம். அதேபோல் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைளுக்கு அம்னோ மற்றும் பாரிசான் அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் முழு ஒத்துழைப்பு அளிப்பர்," என்றார் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப்.