
செய்திகள் மலேசியா
ஆம்புலன்ஸ், கார் மோதல்: இரு குழந்தைகள், தாய்மார்கள் உயிர் தப்பினர்
கூலிம்:
இரண்டு குழந்தைகள், தாய்மார்கள் சென்ற ஆம்புலன்ஸ் வாகனமும் ஒரு காரும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் கூலிம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனினும், இந்த விபத்தில் உயிருடற் சேதங்கள் ஏதும் பெரிதாக ஏற்படவில்லை என கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தெரிவித்துள்ளது.
அத் துறையின் துணை இயக்குநர் Mohamadul Ehsan Mohd Zain கூறுகையில், விபத்தில் சிக்கிய குழந்தைகளும் தாய்மார்களும் நலமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
"இரு குழந்தைகளுக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இரு தாய்மார்களுக்கும் சுகாதார அமைச்சின் குழுவினருக்கும் லேசான காயங்களும் ஏற்பட்டன. அவர்கள் அந்த ஆம்புலன்சில் பணியாற்றியவர்கள்.
"விபத்தில் சிக்கிய கார் ஓட்டுநரும், அதில் இருந்த 50 வயதுள்ள ஒரு பெண்மணிக்கும் கூட லேசான காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்த அனைவரும் கூலிம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் பின்னர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.
Padang Kulim health clinicல் இருந்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனமும், ஒரு காரும் சாலை சந்திப்பு ஒன்றில் மோதிக்கொண்டன.
இதையடுத்து ஆறு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காலை சுமார் 10.53 மணியளவில் விபத்து குறித்த அழைப்பு வந்தது. உடனடியாக மீட்புப் பணி தொடங்கியது," என்றார் முஹம்மதுல் எஹ்சான் முஹம்மது.