
செய்திகள் மலேசியா
பிரதமராக முயற்சியா?: ஹிஷாமுதீன் திட்டவட்ட மறுப்பு
கோலாலம்பூர்:
வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் துன் ஹுசைன் தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்க தேசிய முன்னணி ஆதரவு அளிப்பதாக குறிப்பிட்டு வெளியான கடிதம் உண்மையானது அல்ல என்று கூறப்பட்டுள்ளது. ஹிஷாமுதீனின் தகவல் குழு இந்தச் செய்தியை மறுத்துள்ளது.
இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் தீய எண்ணத்துடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என டுவிட்டர் பதிவு ஒன்றில் அக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த கடிதத்தையும் அக் குழு பகிர்ந்துள்ளது.
தமக்கு ஆதரவு அளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாமன்னரிடம் அளிக்க விரும்புவதாகவும், தாம் புது அரசாங்கத்தை அமைக்கும் எண்ணம் கொண்டிருப்பதாகவும் ஹிஷாமுதீன் அக்கடிதத்தில் குறிப்பிட்டு மாமன்னரைச் சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டிருப்பதாக தகவல் வெளியானது.
ஹிஷாமுதீன் பிரதமராக முழுமையான ஆதரவு அளிப்பது என்று தேசிய முன்னணியின் உச்ச மன்றக் குழு முடிவெடுத்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தை மேற்கோள் காட்டி கூறப்பட்டது.
அனைத்திலும் உச்சமாக ஹிஷாமுதீன் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்கள் எனக் குறிப்பிட்டு ஒரு பட்டியலும் வலம்வந்தது. அதில், பிகேஆர் முன்னாள் உதவித்தலைவர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் பெயரும் காணப்பட்டது.
அம்னோவின் அஸ்லினா ஒத்மான் Azalina Othman அடுத்த வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்பார் என்பன உள்ளிட்ட மேலும் பல ஆருடங்கள் நிலவின. இந் நிலையில் ஹிஷாமுதீனின் தகவல் குழு இத்தகைய ஆரூடங்களைப் புறந்தள்ளியதுடன், அனைத்தும் உண்மைக்கு அப்பாற்பட்டவை என விளக்கம் அளித்துள்ளது.
அண்மையில் ஓர் இணைய ஊடகம் ஹிஷாமுதீன் அடுத்த பிரதமராக வாய்ப்புள்ளதாகவும், அஸ்மின் அலி துணைப் பிரதமராகவும் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக செய்தி வெளியிட்டது. அதை அவர் உடனுக்குடன் மறுத்திருந்தார்.