
செய்திகள் மலேசியா
தரமான தடுப்பூசிகளை நேரடி நன்கொடையாகப் பெறலாம்: கைரி
கோலாலம்பூர்:
தரமான தடுப்பூசிகளை நேரடி நன்கொடையாகப் பெற தடையேதும் இல்லை என அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்கள் இத்தகைய நன்கொடைகளை கூட்டரசுப் பிரதேச அரசின் மூலம் பெறவேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
புத்ரா ஜெயா மூலம் தடுப்பூசிகளைப் பெறுவது தற்போதுள்ள வாய்ப்புகளில் ஒன்று மட்டுமே என்றும், மாநில அரசுகள் தங்களது சொந்த முயற்சியில் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு அனுமதி உண்டு என்றும் அவர் கூறியுள்ளார். எனினும், எத்தகைய தடுப்பூசியாக இருந்தாலும் அது தேசிய மருந்து ஒழுங்குமுறை முகமையின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
"உதாரணமாக நன்கொடையாக தடுப்பூசிகளைப் பெற மாநில அரசாங்கங்கள் விரும்பக்கூடும். அதுதான் நிலைமை எனும் பட்சத்தில் அந்தத் தடுப்பூசிகள் நியாயமான சட்டப்பூர்வமான முறையில் கிடைக்குமா என்பதையும் அத் தடுப்பூசிக்கு உரிய அனுமதி உள்ளதா என்பதையும் உறுதி செய்வோம். அதன் பின்னர் நன்கொடையைப் பெறுவதில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் மாநில அரசுக்கு இருக்காது," என்று அமைச்சர் கைரி மேலும் தெரிவித்தார்.
"கூட்டரசுப் பிரதேச அரசின் மூலம் தடுப்பூசிகளை அளிப்பது அதை அளிப்பவர்களின் விருப்பம். இதுவும் ஒரு வழிமுறை எனலாம். மாறாக, நேரடியாக மாநில அரசிடம் நன்கொடையை அளிக்க விரும்பினால் அதுவும் சாத்தியம்தான். எந்தச் சூழ்நிலையிலும் தேசிய மருந்து, ஒழுங்கு முகமையில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள தடுப்பூசிகளை மட்டுமே பெறமுடியும்," என்றார் அமைச்சர் கைரி.