
செய்திகள் மலேசியா
மஇகாவை சமுதாயம் சார்ந்த, சமுதாய உணர்வுகளோடு இணைந்து இயங்கும் கட்சியாக தொடர்ந்து வழிநடத்துவேன்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
ம.இ.கா. தேசியத் தலைவராக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், நாடு தழுவிய அளவில் உள்ள 3,620 ம.இ.கா. கிளைகள் தன்னை தேசியத் தலைவர் பதவிக்கு முன்மொழிந்து, வழிமொழிந்திருப்பது பெருமை அளிப்பதாகக் கூறியுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக கட்சியின் தேசியத் தலைவராக தாம் ஆற்றிய சேவைகள், தமது தலைமைத்துவ பாணி, கட்சிக்காகவும் சமுதாயத்துக்காகவும் தாம் முன்னெடுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் ம.இ.கா.வினர் தம்மை மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என தாம் உணர்வதாக அவர் கூறியுள்ளார்.
ம.இ.கா.வினர் அனைவரும் தம்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஏற்ப தமது கட்சி மற்றும் சமுதாயப் பணிகளைத் தொடர்ந்து உற்சாகத்துடன் வழிநடத்த இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கட்சியினரின் இத்தகைய ஏகோபித்த ஆதரவு கிடைத்திருப்பதால் கட்சிக்காகவும் சமுதாயத்துக்காகவும் துணிச்சலுடன் போராடுவதற்கான வலிமையும் உத்வேகமும் தமக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ம.இ.கா. என்ற அரசியல் கட்சி வெறும் அரசியலுக்காக தோன்றிய கட்சி அல்ல என்றும் மலேசிய இந்திய சமுதாயத்திற்காக போராட பாடுபட உருவாக்கப்பட்ட கட்சி என்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
"இப்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் மாற்றங்களால், நமது கட்சியும், சமுதாயமும் எதிர்நோக்கியிருக்கும் சவால்களும், பிரச்சனைகளும் மாறுபட்டவை, வித்தியாசமானவை என்பதையும் நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.
"அதற்கேற்ப எனது தலைமைத்துவமும் அமைந்திருக்கும். முதல் கட்டமாக மஇகாவை சமுதாயம் சார்ந்த, சமுதாய உணர்வுகளோடு இணைந்து இயங்கும் கட்சியாக தொடர்ந்து வழிநடத்துவேன்," என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளார்.