
செய்திகள் மலேசியா
ஜூலை மாதத்திற்குள் 16 மில்லியன் தடுப்பூசிகள் மலேசியா வந்தடையும்: கைரி தகவல்
புத்ராஜெயா:
எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் மேலும் 16 மில்லியன் தடுப்பூசிகள் மலேசியா வந்தடையும் என அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
12 மில்லியன் சினோவாக் தடுப்பூசிகள், 2.2 மில்லியன் ஃபைசர்-பயோஎன்டெக், மற்றும் 1.2 மில்லியன் அஸ்ட்ராஸ்ரஸெனகா தடுப்பூசிகள் ஆகியவையும் இந்த எண்ணிக்கையில் அடங்கும் என்று அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
ஃபைசர்-பயோ எம்டெக் நிறுவனத்திடமிருந்து மலேசியா வாங்கியுள்ள 2.2 மில்லியன் தடுப்பூசிகள் அந்நிறுவனத்திடமிருந்து அரசாங்கம் வாங்கியுள்ள 12.8 மில்லியன் தடுப்பூசிகளில் அடங்கும் என்றார் அவர்.
அடுத்துவரும் நாட்களில் தடுப்பூசி போடும் விகிதம் நாளொன்றுக்கு 150,000 ஆக அதிகரிக்கும் என்று குறிப்பிட்ட அமைச்சர் கைரி, இந்த இலக்கை நிச்சயமாக எட்டிப் பிடிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அண்மையில் ஒரேநாளில் 99,000 லட்சம் ஊசிகள் செலுத்தப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க அதற்கான மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார் அமைச்சர் கைரி. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்ய முடியாதவர்களுக்கு அடுத்து வரும் மாதங்களில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.