செய்திகள் மலேசியா
மூன்று கட்டங்களாக அமல்படுத்தப்படும் MCO: பிரதமர் அலுவலகம் விளக்கம்
புத்ராஜெயா:
முழு அளவிலான MCO அறிவிக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இம் முறை மூன்று கட்டங்களாக MCO அமலாக்கம் செய்யப்படும் என்றும், முழு முடக்க நிலையில் இருந்து விடுபட, படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் தெளிவுபடுத்தி உள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முதற்கட்ட முழு முடக்கநிலை MCO-வின்போது தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை வெற்றிகரமாகக் குறைந்தது எனில், அடுத்தகட்ட MCOவை அரசாங்கம் அமல்படுத்தும்.
அப்போது குறிப்பிட்ட பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும். எனினும் அச்சமயம் பெரிய ஒன்றுகூடல்களுக்கு அனுமதி கிடையாது. சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
இரண்டாம்கட்ட MCOவானது 4 வாரங்களுக்குக் கடைப்பிடிக்கப்படும். அதன்பிறகே நாடு 3ஆம் கட்ட MCO காலத்துக்குள் நுழையும். அந்த 3ஆவது கட்டத்தில் பெரும்பாலான பொருளாதாரத் துறைகள் மீண்டும் திறக்கப்படும்.
குறிப்பிட்ட கட்டுப்பாடுகளைப் பின்பற்றவேண்டி இருக்கும். எனினும், சமூக நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை.
முதற்கட்ட MCOவிலிருந்து அடுத்துடுத்த கட்டங்களுக்கு நகர்வது குறித்து சுகாதார அமைச்சு அரசாங்கத்துக்குப் பரிந்துரைக்கும். தொற்றுப் பரவல் ஆபத்து குறித்து சுகாதார அமைச்சு மதிப்பீடு செய்து அளிக்கும் பரிந்துரையின் பேரில் முடிவெடுக்கப்படும்.
அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளையும் நிறுத்துவது, மூடுவது, சமூக நடவடிக்கைகளுக்குத் தடைவிதிப்பது தொடர்பான அரசாங்கத்தின் இந்த முடிவை அடுத்து பாதிக்கப்படும் பொருளாதார துறைகளுக்கும் மலேசியர்களுக்கும் உதவும் பொருட்டு நிதியமைச்சு உதவித் திட்டங்களை விரைவில் அறிவிக்கும்.
இந்த முழுமையான MCO காலகட்டத்தில் மலேசியர்கள் இயன்றவரை தங்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டும் என்றும் SOPக்களை முழுமையாகவும் முறையாகவும் பின்பற்றி தொற்றுச்சங்கிலியை உடைக்க உதவவேண்டும் என்றும் பிரதமர் அலுவலகம் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 4:40 pm
தியாகம், மனவுறுதி, அர்ப்பணிப்புடன் தேவையுள்ளோருக்கு உதவுவதே குர்பான்: பிரதமர் அன்வார்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
