
செய்திகள் மலேசியா
தடுப்பூசி திட்டம் கிராமப்புறங்களைச் சென்றடையவில்லை : சாடுகிறார் அன்வார் இப்ராஹிம்
கோலாலம்பூர்:
அரசாங்கத்தின் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கிராமப்புறங்களைச் சென்றடையவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
எனவே, தனியார் துறையினரும் மாநில அரசாங்கங்களும் சொந்தமாக தடுப்பூசி வாங்கிக் கொள்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
"இது பொதுமக்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. இதில் அரசியலையும் தனிப்பட்ட லாபங்களையும் முன்வைக்கக் கூடாது.
"உரிய முன்னேற்பாடுகளை செய்யாமல் அரசாங்கம் முழு முடக்கநிலை அறிவித்திருப்பது தவறு. முழு முடக்க நிலையால் பாதிக்கப்படும் மலேசியர்களுக்கு ஏன் இன்னும் எந்தவித உதவிகளையும் அரசாங்கம் அறிவிக்கவில்லை," என்று அன்வார் இப்ராஹிம் கேள்வி எழுப்பி உள்ளார்.
தேசிய தடுப்பூசி திட்டமானது மிக நிதானப் போக்குடன் செயல்படுத்தப்படுவதாகவும், அதன் பலன் கிராமப்புற மக்களை இன்னும் எட்டவில்லை என்றும் அன்வார் சாடியுள்ளார்.
எனவே, தனியாரும் மாநில அரசாங்கங்களும் தாங்களே தடுப்பூசி பெறுவதற்கும், தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மேலும் திறம்பட செயல்படுத்துவதற்கும் அனுமதி அளிப்பது குறித்து அரசாங்கம் இன்றே முடிவெடுக்க வேண்டும்," என அன்வார் வலியுறுத்தி உள்ளார்.
தேசிய தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்து அனைத்துலக சுகாதார நிபுணர்களுடன் தாம் கலந்தாலோசித்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதில் கவலைக்குரிய அம்சங்கள் இருப்பதாகத் தெரிவித்தனர் என்று கூறியுள்ளார்.