
செய்திகள் மலேசியா
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள்: மாமன்னருக்கு மகாதீர் கோரிக்கை
கோலாலம்பூர்:
மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க மாமன்னர் தலையிட வேண்டும் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மொஹம்மத் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தாம் மாமன்னருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த மே 31ஆம் தேதி தாம் அனுப்பிய கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை என இன்று இணையம் வழி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மகாதீர் குறிப்பிட்டார்.
"மாமன்னர்தான் மக்களின் பாதுகாவலர் என்றும் மக்களைக் காக்கும் குடை என்றும் நம்புகிறோம். எனவே அரசாங்கத்திடம் தாங்கள் எதிர்பார்த்தது கிடைக்காத போது வருத்தம் அடையும் மக்கள், தங்கள் பிரச்சினைகளை தீரப்பதற்காக மாமன்னரை எதிர்நோக்குவர்.
"மாமன்னர், அரசாங்கம் அல்லாமல் வேறு யாரிடம் மக்களால் உதவி கேட்க முடியும்?" என்று மகாதீர் குறிப்பிட்டார்.
தற்போது நடைபெறும் மோசமான ஆட்சி நாட்டைத் தொடர்ந்து வழிநடத்த மக்கள் அனுமதிக்க வேண்டுமா? எனும் கேள்வியையும் மகாதீர் முன்வைத்தார்.
"எனவேதான் மாமன்னருக்கு கடிதம் வழி கோரிக்கை விடுத்துள்ளோம். மக்களின் பிரச்சினைகளை கவனிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளோம்," என்றார் மகாதீர்.
கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையும் மரணங்களும் அதிகரித்திருப்பது மற்றும் அவசர நிலை பிரகடனம் ஆகியவற்றை மகாதீர் சுட்டிக்காட்டினார்.