செய்திகள் மலேசியா
சீன விமானங்களின் ஊடுருவல் கவலை அளிக்கிறது: சரவாக் அரசு
கூச்சிங்:
மலேசிய வான் வெளியில் சீன விமானங்கள் ஊடுருவிய சம்பவமானது தங்களுக்கு கவலை அளிப்பதாக சரவாக் மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கூட்டரசு பிரதேச அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் சரவாக் அரசாங்கம் ஆதரவு அளிப்பதாக அம் மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியாவுக்கான சீன தூதரை நேரில் அழைத்து விளக்கம் அளிக்குமாறு மலேசிய அரசு கோரியதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.
"நாட்டின் இறையாண்மை, கண்ணியம் மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது, நிலைநிறுத்துவது, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வது ஆகியவை கூட்டரசு பிரதேச அரசின் கடமையாகிறது. எனவே அந்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆதரிக்கிறோம்" என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசிய வான்பரப்பில் சீன விமானங்கள் அத்துமீறி நுழையவில்லை என்றும் அவை வழக்கமான பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டிருந்ததாகவும் சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக சட்டத்தின்படி சீன ராணுவ விமானங்கள் உரிய வான்பரப்பில் பறப்பதற்கான சுதந்திரத்தைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு மலேசிய வான்பரப்பில் ஊடுருவிய சீன விமானப் படையைச் சேர்ந்த விமானங்களை மலேசிய விமானப்படை விமானம் இடைமறித்தது.
சீன விமானப் படையின் இச்செயலை ஏற்க இயலாது என மலேசியா தெரிவித்துள்ளது. இது மலேசியாவின் இறையாண்மைக்கும் அதன் விமானங்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
ஜொகூர் பிரச்சாரத்தில் மசீசவுக்கு எதிராக டத்தோஸ்ரீ அன்வர் கிண்டலான கருத்துக்களைத் தெரிவித்தார்
July 9, 2026, 11:01 pm
