
செய்திகள் மலேசியா
இந்தியாவில் இருந்து மலேசியர்களை அழைத்து வர சிறப்பு விமானம்: ஜூன் 6ஆம் தேதி இயக்கப்படுகிறது
கோலாலம்பூர்:
இந்தியாவில் இருந்து மேலும் பல மலேசிய குடிமக்கள் தாயகம் திரும்ப உள்ளனர். இதற்கென சிறப்பு விமானம் ஒன்று ஜூன் 6ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்பட உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு திருச்சி செல்லும் இந்த விமானம் வாடகை அடிப்படையில் இயக்கப்படுகிறது.
மருத்துவம், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ள மலேசியர்கள் பலர் தாயகம் திரும்ப முடியாமல் அங்கு சிக்கி உள்ளனர்.
உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் உலகளவில் இரு நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு, சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் அவ்வப்போது சில விமானங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் லட்சக்கணக்கானோர் தாயகம் திரும்பி உள்ளனர்.
இந் நிலையில் நாளை மலிண்டோ நிறுவன விமானம் இங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் தமிழகத்தின் திருச்சி வட்டத்துக்குச் செல்கிறது. பின்னர் இதே விமானம் இந்திய நேரப்டி மாலை 5 மணிக்கு திருச்சியில் இருந்து மலேசியக் குடிமக்களை ஏற்றிக்கொண்டு கோலாலம்பூர் திரும்புகிறது.
இத் தகவலை கிள்ளானைச் சேர்ந்த கே.பி.எஸ். பயண நிறுவனத்தின் நிர்வாகி கே.பி. சாமி தெரிவித்துள்ளார்.
இந்தச் சிறப்பு வாடகை விமானத்தில் தாயகம் திரும்புவோர் புதிய நெறிமுறைகளின்படி 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று தெரிகிறது.