
செய்திகள் மலேசியா
பறந்தபடி உடல் வெப்ப நிலையை பரிசோதிக்கும் ட்ரோன்கள் (DRONE)
கோல திரங்கானு:
முழு முடக்க நிலையின்போது வீட்டிற்கு வெளியே நடமாடுபவர்களின் உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்க காவல்துறையினர் ட்ரோன்களைப் (DRONE) பயன்படுத்துவதாக திரங்கானு மாநில காவல்துறை தலைவர் ரொஹைமி முஹம்மத் ஈசா (Rohaimi Mohammad Isa) தெரிவித்துள்ளார்.
இதற்காக அந்த ட்ரோன்களில் வெப்பநிலையைக் கண்டறியும் கருவி இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதிலுள்ள தொழில்நுட்பத்தின் மூலம் அதிக வெப்ப நிலை உள்ளவர்களை அடையாளம் காணமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரையில் இருந்து ஏறத்தாழ 20 மீட்டர் உயரத்தில் பறந்தபடியே இந்த ட்ரோன்கள் வெப்பநிலையைப் பதிவு செய்யும் என்றார் அவர்.
"குறிப்பிட்ட பகுதியில் கூடியுள்ள மக்களில் ஒருநபருக்கு அதிக வெப்பநிலை இருப்பதை கண்டறியும் பட்சத்தில் அந்த ட்ரோனில் இருந்து சிவப்பு ஒளி பாய்ச்சப்படும். இதையடுத்து அமலாக்க அதிகாரிகள் அந்த இடத்துக்கு விரைந்து சென்று குறிப்பிட்ட நபரை அடையாளம் காண்பார்கள்.
"கடந்த 3 தினங்களாக அமலாக்கக் குழுவின் உதவியோடு அந்த ட்ரோன்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன," என்றார் ரொஹைமி.
தற்போது 157 கண்காணிப்புக் குழுக்கள் வெவ்வேறு பகுதிகளில் பணியில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், அனைத்துப் பகுதிகளையும் ஒரே நேரத்தில் கண்காணிக்க இயலவில்லை என்றார்.
பொது இடங்களில் தொற்று அறிகுறிகள் உள்ள தனி நபர்களைக் கண்டறிய முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
கோல திரங்கானுவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் முழு முடக்க நிலையின்போது காவல்துறைக்கு உதவும் பொருட்டு இவற்றை அளித்துள்ளனர் என்றார் ரொஹைமி.
திரங்கானுவைப் பொறுத்தவரை 96 விழுக்காட்டினர் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வருவதாக குறிப்பிட்ட அவர், காவல்துறை அமலாக்கம்தான் இதற்கு காரணம் என்றும் இது பெருமை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.