
செய்திகள் மலேசியா
எத்தனை விமானங்கள் ஊடுருவின?: மலேசியா தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட அமெரிக்கா
கோலாலம்பூர்:
மலேசியா வான்பரப்புக்குள் எத்தனை சீன விமானங்கள் ஊடுருவின என்பது தொடர்பாக மலேசிய அரசு தெரிவித்த எண்ணிக்கையை ஏற்று அமெரிக்க அரசு ஆதரவளித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த இந்த ஊடுருவல் நடவடிக்கையில் 16 சீன விமானங்கள் ஈடுபட்டிருந்ததாக மலேசியா தெரிவித்தது. ஆனால் சீன ராணுவத் தரப்பில் இரண்டு விமானங்கள் மட்டுமே பயிற்சியில் ஈடுபட்டிருந்தன எனக் கூறியதாக தகவல் வெளியானது.
மேலும், தென்சீனக் கடல் பகுதியில் அமைந்துள்ள சீனாவுக்குச் சொந்தமான நிலப்பரப்பில் உள்ள அந்நாட்டு வீரர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் பொருட்டு அந்த இரு விமானங்களும் இயக்கப்பட்டதாகவும் சீன ராணுவ வட்டாரங்கள் மூலம் தெரியவந்ததாக The South China Morning Post செய்து வெளியிட்டுள்ளது.
இந் நிலையில் இந்த ஊடுருவல் சம்பவம் தொடர்பாக அரச மலேசிய விமானப் படை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு நெருக்கமான ஓர் எண்ணிக்கையிலான சீன விமானங்கள் ஊடுருவல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அமெரிக்க பசிபிக் விமானப்படை வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாகவும் அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"சீனா குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விமானங்கள் மட்டுமே மலேசிய வான்பரப்பில் பறந்ததாக கூறப்படுவது சரியல்ல," என்று அமெரிக்க பசிபிக் விமானப்படையின் கமாண்டர் ஜெனரல் Ken Wills Batch தெரிவித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்த ஊடுருவல் சர்ச்சை தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்து மலேசியாவை ஆதரித்து வருகிறது.