
செய்திகள் மலேசியா
MCO 3.0 மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு?: பரபரப்பை ஏற்படுத்திய தகவல் உண்மையா?
புத்ராஜெயா:
எதிர்வரும் 14ஆம் தேதிக்குப் பிறகு நாடு முழுவதும் தற்போது அமலில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று வெளியான தகவலை அரசாங்கம் மறுத்துள்ளது.
சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்ததாக குறிப்பிட்டு பரவிய தகவலை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.
"அமைச்சர் இவ்வாறான தகவல் எதையும் வெளியிடவில்லை. இது உண்மைக்குப் புறம்பான தகவல்," என்று முகநூல் பதிவு ஒன்றில் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
MCO 3.0 மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
"MCO நீட்டிக்கப்படும் என்று அமைச்சர் கூறவில்லை. அது நீட்டிக்கப்பட வேண்டுமா, கூடாதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று மட்டுமே அமைச்சர் கூறினார்," என்று சுகாதார அமைச்சு முகநூல் பதிவில் மேலும் விளக்கமளித்துள்ளது.
MCO 3 அமலில் இருக்கும் நிலையில் அன்றாட தொற்று எண்ணிக்கை 9 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரத்துக்கும் கீழ் வந்துள்ளது. இந்த எண்ணிக்கை 4 ஆயிரமாகக் குறைய வேண்டும் என சுகாதார அமைச்சு எதிர்பார்ப்பதாகவும் அந்த இலக்கைச் சாதிக்க மேலும் 2 வாரங்களுக்கு MCO நீட்டிக்கப்பட இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் கூறியதாக வெளியான தகவலால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இது பொய்த் தகவல் என சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.