
செய்திகள் மலேசியா
SOPகளைப் பின்பற்றாத 59 தொழிற்சாலைகளை மூடுவதற்கு உத்தரவு: இஸ்மாயில் சப்ரி தகவல்
கோலாலம்பூர்:
இம் மாதம் முதல் தேதியிலிருந்து இதுவரை 59 தொழிற்சாலைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.
SOPகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது விதிமுறைகளை மீறிய தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 1ஆம் தேதியிலிருந்து 268 தொழிற்சாலைகளில் அமலாக்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 75 தொழிற்சாலைகளுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன.
நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமலாக்கப் பிரிவினர் காவல்துறையினர், சம்பந்தப்பட்ட முகைமைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின்போது SOPகளைப் பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் சில தொழிற்சாலைகள் அத்தியாவசிய சேவைப் பிரிவின் கீழ் இடம்பெறாவிட்டாலும்கூட MCO 3.0 காலகட்டத்தில் அவை தொடர்ந்து இயங்குவதாக தங்களுக்குத் தகவல் கிடைத்தது என்றார் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப்.
இதையடுத்து அத்தகைய புகார்களின் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.